ராஜாக்கமங்கலம் அகழாய்வுப் பணி- வரும் 17ம் தேதி துவங்குகிறது
நெல்லை: நெல்லை அருகே ராஜாக்கமங்கலத்தில் தொல்லியல் துறையினர் மார்ச் 17 முதல் அகழாய்வு பணி மேற்கொள்ள உள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது ராஜாக்கமங்கலம். இங்குள்ள சுமார் 33 ஆயிரம் சதுரடி பரபரப்பளவில் கி.பி 8ம் நூற்றாண்டு காலத்தில், சிலைகள் வடிக்கும் சிற்ப கலைக்கூடம் செயல்பட்டதாக அறியப்படுகிறது.
தோண்டும் இடமெல்லாம் இப்பகுதியில் சிற்பங்கள் கிடைக்கின்றன. ஆற்றோரம் துணி துவைக்கும் கல் கூட சிற்பங்களாகவே இருக்கின்றன.
ஏற்கனவே இப்பகுதியில் புதைந்து கிடந்த பல சிற்பங்கள் மீட்கப்பட்டு நெல்லை அருட்காட்சியகம், மதுரை திருமலை நாயக்கர் மகாலில் சிற்பக் கூடத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இருந்து நாடகசாலை, நரசிம்மர், சப்தமாதர், செவ்வாய், இந்திரன் உள்ளிட்டோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் ராஜாக்கமங்கலத்தில் அகழாய்வு பணிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டு இப்பணி மார்ச் 17ல் துவங்குகிறது.
இதையொட்டி, மதுரை தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ராஜாமங்கலம் பகுதிக்கு சென்று அகழாய்வு குறித்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மதுரையில் கோவலன் பொட்டல், மாங்குளம், ராமநாதபுரம் தேரிருவேலி, தர்மபுரி ஆலப்பட்டி, மோதூர், கோவை பேரூர், நெல்லை மாங்குடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்டான் சோழபுரம், பரிக்குளம் இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஏற்கனவே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது.
இது பல்வேறு அரிய பழமை வரலாறுகளை ஆதாரத்தோடு நமக்கு காட்டி உதவியுள்ளது. இவ்வரிசையில் நெல்லை ராஜாக்கமங்கலம் சிற்பங்கள் வடித்தெடுக்கும் கலைக்கூடமாக விளங்கியுள்ளது.
அகழாய்வுக்கு பிறகு கிடைக்கும் சிலைகள், பொருட்களை கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இவ்விடத்தை அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்' என்றனர்.