எய்ட்ஸ் தடுப்புப் பணியில் சீரிய சேவை- எம்பவர் அமைப்புக்கு தமிழக அரசு விருது
சென்னை சாம்பசிவம் அரங்கில் நடைபெற்ற தென் மாநில அளவிலான மாநாட்டில் எம்பவர் சமூக சேவை அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கரிடம் நாடாளுமன்ற உறுப்பினரும் வேளாண் விஞ்ஞானியுமான மா.சா. சாமிநாதன் விருதை வழங்கினார்.
விழாவிற்கு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சப்தரிஷி தலைமை தாங்கினார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் சம்பு கலோலிகர், வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் கௌரவ செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட இயக்குநர் பிமல் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்பவர் அமைப்பு 1993 முதல் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. பாலியல் தொழில் செய்யும் பெண்கள், லாரி ஓட்டுநர்கள், சிறைச்சாலையில் இருப்பவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் மத்தியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணியில் எம்பவர் அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.
எம்பவர் அமைப்பில் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மூலம் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. எய்ட்ஸ் திட்டத்தின் மூலம் இதுவரை செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆர்.ஐ.எம்.பி மருத்துவர்கள், பலநோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆகிய துறையினருக்கு தரமான பால்வினை நோய் சிகிச்சை குறித்த பயிலரங்கங்களை எம்பவர் அமைப்பு நடத்தி உள்ளது.