15 ஆண்டுகளில் மைனாரிட்டியாக உள்ள ஆஸ்திரேலியர்கள்!
மோக்ரோபிளான் ஆஸ்திரேலியா என்ற மக்கள் தொகை ஆய்வு அமைப்பு நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டினரான ஆஸ்திரேலியர்களின் சராசரி வயதும் அதிகரித்து வருகிறது.
இளம் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவர்கள் மூலமான குழந்தைப் பிறப்பும் குறையும். இதனால் 2025ம் ஆண்டில் உள்நாட்டு மக்கள் மைனாரிட்டிகளாகிவிடுவர்.
வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க முடியாது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் வருகை மிகவும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு வரிகளும் மிக அதிகமாகிவிடும்.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரில் 14.2 சதவீதம் பேர் பிரிட்டனில் இருந்தும், 11.4 சதவீதம் பேர் நியூசிலாந்தில் இருந்தும், 11.2 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்தும், 10.5 சதவீதம் பேர் சீனாவில் இருந்தும் வருகின்றனர்.
2006ம் ஆண்டு சென்சஸ் கணக்கின்படி 40 சதவீத ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் ஒரு சில நிறவெறி ஆஸ்திரேலியர்கள் மத்தியில் இந்த ஆய்வறிக்கை பூகம்பத்தைக் கிளப்பும் என்று தெரிகிறது.