இ.யூ. முஸ்லீம் லீக் சார்பில் கருணாநிதிக்கு சமூக நல்லிணக்க விருது
மயிலாடுதுறை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்படவுள்ளது.
அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் இளைஞரணி மாநாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த இயக்கத்திற்கு மூன்று உயிர் நாடி கொள்கைகள் உள்ளன. முதலாவது இந்திய தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பாடுபடுவது, இரண்டாவதாக மதச்சார்பற்ற நாடான இந்த நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழியான சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடுவது. மூன்றாவதாக சிறுபான்மையினரின் தனித்தன்மையை பாதுகாக்க பாடுபடுவது.
தமிழக அரசு திருமணப் பதிவு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதில் இஸ்லாமிய சட்டம் சில இடங்களில் மறுக்கப்படுவதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். முதல்வர் அதை கவனத்தில் கொண்டு உரிய திருத்தம் செய்துதர உறுதி அளித்துள்ளார்.
சமச்சீர் கல்வி முறையில் உருது மொழி பேசும் சிறுபான்மை மக்கள் தங்களுக்கு ஏற்படயிருந்த பாதகங்களை எடுத்துக் கூறினர். அதனையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அரசும் பரிசீலனை செய்து பாதகங்களை நீக்குவதாக உறுதி அளித்துள்ளது.
முஸ்லிம்களின் நலன், சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் கருணாநிதியை பாராட்டி விருது வழங்க உள்ளோம்.
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவருமான அஹமதுவை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
வேலூர் எம்பி நிதியிலிருந்து ஸ்கேன் கருவிகள்:
இந் நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்வத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அதில் பேசிய வேலூர் எம்பி அப்துல் ரஹ்மான், எனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 5லட்சம் செலவில் ஸ்கேன் கருவிகளும், மருந்துகளும் வாங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் முயற்சியில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.