இதுவரை இல்லாத அளவுக்கு அண்ணா பல்கலை.யில் குவிந்த இரட்டையர் மாணவர்கள்
இரட்டையர்கள் ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் ஒரே கல்வி நிறுவனத்தில் ஏராளமான பேர் சேர்ந்து படிக்கும்போது அது செய்தியாகி விடுகிறது. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இரட்டையர் நடமாட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சற்று அதிகமாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மத்தியில் வியப்பு ஏற்பட்டுள்ளது.
ஜி.செளம்யாவும் அவரது சகோதரி சுமீதாவும் கிண்டி வளாகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இருவரும் அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல எந்தவிதமான வித்தியாசத்தையும் பார்க்க முடியாதபடி ஒரே மாதிரி இருக்கிறார்கள். அதேபோல ஏவிஎன் விக்னேஷும், அவரது சகோதரர் விக்ரமும். இவர்களும் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இவர்களோடு நிற்கவில்லை. இதேபோல மேலும் ஐந்து ஜோடி இரட்டையர்கள் இந்த முறை கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதேபோல அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டியில் இரண்டு ஜோடி இரட்டையர்கள் புகுந்துள்ளனராம்.
அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் சேர்ந்து படிப்பது இதுவே முதல்முறை என்கிறார் கிண்டி என்ஜீனியரிங் கல்லூரி டீன் எம்.சேகர்.
அடுத்த நான்கு வருடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த இரட்டையர்களால் ஏற்படப் போகும் குஷி, குறும்புத்தனங்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.