சீன மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது திருக்குறள்- கலாம்
சென்னை : சீனாவின் மான்டரின் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படவுள்ளது. இதற்கு தைவான் நாட்டு கவிஞர் யூ ஷீ உதவி செய்யவுள்ளார் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த கவிஞர் யூ ஷீக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நடை பெற்ற இந்த விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தலைமை தாங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தைவான் நாட்டை சேர்ந்த கவிஞர் யூ ஷீ. ஆங்கிலத்தில் நாவல் எழுவதிலும், கவிதை எழுதுவதிலும் வல்லவர். அது மட்டுமல்லாமல் இசை, மேடை நாடகம், புகைப்படம் எடுத்தல் முதலியவற்றிலும் புதுமைகளை கையாண்டு வருகிறார். தைவான் நாட்டில் பாராட்டப்படும் மனிதராக அவர் இருந்து வருகிறார்.
இவருடைய எழுத்துக்களில் புத்த மத தத்துவங்கள் பற்றியும், இயற்கை, சுற்றுசூழல் பிரச்சினை பற்றியும் எழுதியிருக்கிறார். 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்தியிருக்கிறார். அவரின் எழுத்துக்கள் பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவர் உலக கவிஞர்கள் சங்க கவரவ தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவரின் சாதனையை பாராட்டி நிகழ்ச்சியில் அவருக்கு தங்கம் முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மோகன், கவிஞர் யூ ஷீக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் கலாம் பேசுகையில், கவிஞர் யூ ஷீ பற்றியை நினைக்கும் போது எனக்கு திருவள்ளுவர் சொன்ன திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியம் இருந்தால் அதுவே நம்மை உயர்த்தும்.
கவிஞர் யூ ஷீயின் எண்ணம், எழுத்தாக மாறி, கவிதையாக உருமாறும் போது, அவரது கவிதைகளை படிக்கும் போது, திருவள்ளுவரது சிந்தனை எப்படி நாட்டை கடந்து, மொழியை கடந்து, எல்லைகளைக் கடந்து என்றும் நிலைத்து நிற்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
கவிஞர் யூ ஷீயுடன் நான் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரிடம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் எடுத்து கூறினேன். திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்க்கலாம் என்றும் அவரிடம் கூறினேன். அதை ஆர்வமாக கேட்ட அவர் திருக்குறளை சீன மொழியில் டிசம்பர் மாதத்திற்குள் மொழி பெயர்த்து விடுவதாக கூறினார்.
யூ ஷீயின் கவிதையில் சமுதாய எண்ணங்கள் பொதிந்து கிடக்கிறது. இங்கே அவரை பற்றிய பேசியவர்களின் பேச்சுக்களை மலர்களாக்கி அதை ஒரு பூங்கொத்தாக அவருக்கு கொடுக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் அண்ணா பல்கலைக்கழகத்திலே படித்தேன். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினேன். இங்கேயே வாழ்ந்துள்ளேன். இவற்றால் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தேன். இங்கேயே படித்து, இங்கேயே ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார் கலாம்.
யூ ஷீ பேசுகையில், இந்த அழகிய நாட்டிற்கு வந்தது எனக்கு மகிழ்வை தருகிறது. நல்ல மனிதர்களை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றிருப்பதும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தருகிறது என்றார்.
ஆழ்கடல் கனிமம் குறித்த ஆய்வு
இதேபோல சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப தின விழாவில் கலாம் பேசுகையில்,
ஆழ்கடலில் கிடைக்கும் கனிமங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் அதே சமயம் கடலின் சுற்றுச்சூழல் பற்றியும், எரிவாயுசக்தி வளம் பற்றிய ஆய்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் மகாராஷ்டிரம், அசாம், ஆந்திரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் எரிவாயு சக்தி உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த ஆண்டில் ரூ. 4 லட்சம் கோடி மதிப்புள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் எரிசக்திப் பொருள்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி மாற்று எரிசக்தி, மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். கடல் அலையிலிருந்து 70 கிலோ வாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தைத் தேசிய கடல் வளத்துறைத் தொழில்நுட்பக் கழகம் மேற்கொண்டுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன்.
கடல்பாசியில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும் தொழில்நுட்ப ஆய்வை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் காற்றாலை மூலம் 45 ஆயிரம் மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
7 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள கடலோரத்தில் காற்றாலை மின்சக்தி தயாரிக்கும் திட்ட ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
தீவு புறா திட்டத்தின் மூலம் அந்தமான் கடற்கரையோரம் கிடைக்கும் வெப்பநீரை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்க முடியும் என்றார் கலாம்.