நெல்லை மாவட்டத்தில் 8வது சமத்துவபுரம்: மு. க. ஸ்டாலின் திறப்பு
சங்கரன்கோவில்: நெல்லை அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 8வது சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரத்தில் பெரியார் சிலை, சிறுவர் பூங்கா, ரேஷன் கடை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சமத்துவபுர வீடுகளை இன்று காலை 10.15 மணிக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமத்துவபுரத்தில் பால்ராஜ்(எண்-4) என்பவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
அதன் பிறகு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நாட்டிய துணை முதல்வர் அங்குள்ள குடிநீர் குழாயை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கினார்.