கிடைக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்-கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டவர்களுக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலும், கோவில்பட்டி, விளாத்திகுளத்திலும் இன்று நடந்தது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி வரவேற்று பேசினார். சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவிஞர் கனிமொழி எம்.பி. பேசுகையில்,
தமிழகம் முழுவதும் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாழ்க்கை முன்னேற்றதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நெல்லையில் இந்த முகாம் நடக்கும் போது அடுத்த முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். அதனால் தான் 8வது முகாமாக தூத்துக்குடியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 22,23,24 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
ஆனால் எதிர்கட்சிகள் தேர்தல் வருவதால் தான் இந்த முகாம் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவாக திமுக சார்பில் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறோம். அரசியல் நடத்துவதற்காக அல்ல.
வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்பவர்களிடம் நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று கேள்வி கேட்கவில்லை. அவர்களின் படிப்பு திறமைக்கு ஏற்ப தான் வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை 1.17 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் போ பதிவு செய்துள்ளனர். இவர்கள் எதிர்பார்க்கிற வேலையை விட கிடைக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 46 ஆயிரம் பேர் தொழில் முதலீடு செய்துள்ளனர். 20 ஆயிரம் பேர் தொழில் முதலீடு செய்ய ஆயத்தமாக உள்ளனர். இதனால் தொழில் துறையில் தமிழகத்திற்கு பொற்காலம் என்று கூறலாம் என்றார்.