கடவுள் தமிழுக்கு தந்த கொடை கண்ணதாசன்!- எம்எஸ்வி
மலேசிய தமிழ் மக்கள் சார்பில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய கலை விழா காமராஜர் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு எம்.எஸ். விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கவிஞர் காமகோடியன் தொடக்க உரையாற்றினார். மலேசிய கவியரசு கண்ணதாசன் விழாக்குழு தலைவர் பாண்டித்துரை வரவேற்றுப் பேசினார்.
விழாவில் முதலில் கர்ணன் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் இயற்றிய 'கண்கள் இங்கே நெஞ்சமும் இங்கே...' என்ற பாடலை மலேசிய பாடகி சர்மிளா பாடினார். மக்கள் ஆரவாரத்தோடு கைதட்டி மகழ்ந்தனர்.
பின்னர் மலேசிய தமிழ் மக்கள் சார்பில் எம்.என். ராஜம் மற்றும் ஏ.எல். ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
விழாவில் வாணி ஜெயராம் பேசுகையில், "கண்ணதாசனின் பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை. கலைஞர்களுக்கு நல்ல உள்ளம் அவசியம். கண்ணதாசன் போல் பாடல்கள் எழுத கடவுள் அருள் பெற வேண்டும். என்மேல் அதிக அன்பு வைத்திருந்தார். கண்ணதாசன் பாடலை கேட்க நாம் கொடுத்து வைத் திருக்கவேண்டும்," என்றார்.
பின்னர் கவியரசரின் பாடலான "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன், திருக்கோவிலே ஓடி வா" மற்றும் "கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா" போன்ற பாடல்களைப் பாடினார்.
மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் பேசுகையில், "கண்ணதாசனுக்கு நிகரில்லை. அப்படி ஒரு வித்வம் அவருக்கு மட்டுமே கைவரப் பெற்றிருந்தது. பாட்டு எழுத அவருக்கு தனி மூட் தேவையே இல்லை. நினைச்ச மாத்திரத்தில் தமிழ் அருவியா வந்து விழும். அப்படி அவர் எழுதின பாட்டு ஒண்ணா ரெண்டா... கடவுள் தமிழுக்குத் தந்த கொடைதான் கவியரசர் கண்ணதாசன். இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கண்ணதாசன் நம் நெஞ்சிலும் நாவிலும் குடிகொண்டிருப்பார்..." என்றார்.