உலகின் இளம் முன்னோடிகள் பட்டியலில் நந்திதா தாஸ் உட்பட 16 இந்தியர்கள்
ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலக பொருளாதார மன்றம் 2010ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த இளம் தலைமுறை முன்னோடிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 72 நாடுகளைச் சேர்ந்த 197 பேர் கொண்ட இந்த பட்டியலை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.
சிறந்த தலைமைப் பண்பு, சமூக மேம்பாட்டில் பங்களிப்பு என பல்வேறு திறன்களின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட இந்த 197 பேரில் 12 இந்தியர்கள் மற்றும் 4 பேர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் அகதா சங்மா, நடிகையும், இயக்குனருமான நந்திதாதாஸ், விப்ரோ டெக்னாலஜி்ஸ் துணை தலைவர் சங்கிதா சிங், காமட் டெக்னாலஜிஸ் சிஇஓ ஸ்ரீராம் ராகவன், ஜெனரல் எலெக்ட்ரிக் தீஜ்பிரீத் சிங் சோப்ரா, அபராஜ் கேபிடல் நிர்வாக இயக்குனர் அசோக் ஆரம்,
விந்தியா இ-இன்போமீடியா சிஇஓ அசோக் கிரி துர்கேஷ், யூபிஎஸ் செக்யூரிட்டிஸ் தலைவர் மனிஷா கிரோத்ரா, ஸ்ரீரேணுகா சுகர்ஸ் நரேந்திரா முர்கம்பி, அபெக்ஸ் பார்ட்னர்ஸ் சந்தீப் நாயக், லீட் கேப் டிரஸ்ட் சங்கீத் வர்கீஸ், சஸ்டெய்னபில் பிளானட் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சஞ்சீவ் சன்யால் ஆகிய இந்தியர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும் ஓபன்வேவ் சிஸ்டம்ஸ் இயக்குனர் ஆனந்த் சந்திரசேகரன், அப்ராக்சிஸ் பையோ சயின்ஸ் துணை தலைவர் சஞ்சய் குப்தா, சிட்டி குரூப் சிஓஓ ஷாமினா சிங் ஆகிய இந்திய அமெரிக்கர்களும் உலகின் தலை சிறந்த முன்னோடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கனடாவில் வாழும் இந்தியரான ரிக்கேன் பட்டேல் (ஆலாஸ்.ஓஆர்ஜி செயல் இயக்குனர்) பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தொழில், அரசாங்கம், கல்வி, ஊடகம், தொண்டு, கலை என பல்வேறு துறைகளில் சமுதாயத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் திறனுடன் செயல்படும் இளம் தலைமுறையினர் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இப்பட்டியலுக்காக முதலில் 5 ஆயிரம் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு அளவுகோல்களின் மூலம் தேர்வுக் குழுவினர் இறுதி பட்டியலை தயார் செய்தனர்.
ஜோர்டான் நாட்டு ராணி ரனியா தலைமையில் சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் நீதிபதிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
உலகின் தலைசிறந்த இளம் தலைமுறை முன்னோடிகள் பட்டியலில் 38 சதவீதம் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.