ஆடி தபசு திருவிழா பாதுகாப்பு பணியில் 1000 போலீஸ்
15ம் தேதி தொடங்கும் விழாவில், 25-ம் தேதி ஆடி தபசு காட்சி நடைபெறுகிறது. விழாவிற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் சங்கரன்கோவில் வந்திருந்தார். ஆடி தபசு காட்சி நடைபெறும் தெற்கு ரதவீதி மற்றும் நகர வீதிகளை பார்வையிட்ட பின் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறகித்து அவர் கூறுகையில்,
ஆடி தபசு விழாவுக்கு ஏ.டி.எஸ்.பி.க்கள் ராஜன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் 4 டி.எஸ்.பி.கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 4 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்படும்.
இரு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். குற்றங்களை தடுக்கும் வகையில் 25 குற்றபிரிவு போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கோவில் மற்றும் ரத வீதிகளில் 25 கண்காணி்ப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
14-ம் தேதி முதல் கோவில் முன்பு புறக்காவல் நிலையம் செயல்படும். தபசு காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் உள்ள வீட்டு மாடிகளில் வெளிநபர்களை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பைனாக்குலர் மூலம் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கோவிலுக்குள் ஆடி சுற்று சுற்றும் பெண்களுக்கு ஒரு பெண் டி.எஸ்.பி. தலைமையில் பெண் போலீஸ் குழு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.