சக்தி அளிக்கும் ஒரு ஸ்பூன் தேன் : ஆராய்ச்சி முடிவு
படுக்கும் முன் ஒரு ஸ்பூன் நிறைய தேன் அருந்தினால் அது மூளையின் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
மேலும், தேன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு உள்ளும், வெளியும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
ஜலதோஷம் பிடிக்க பலவேறு வைரஸ்கள் காரணமாக இருக்கின்றன. அந்த வைரஸ்களை அழிக்கும் திறன் தேனில் இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா ஸ்டேட் காலேஜ் ஆப் மெடிசினில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் தேன் ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2007-ம் ஆண்டு சிட்னி பல்கலைக்கழகத்தில் ஷோன் பிளேர் நடத்திய ஆய்வில் சூப்பர்பக்கால் ஏற்படும் காயங்களுக்கு தேன் வைத்து கட்டுபோடுவது சிறந்தது என்று கண்டுபிடித்தனர்.
தேன் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், வயிறு உபாதைகளையும் போக்க உதவுகிறது. அடிவயிற்றுப் புண் இருப்பவர்கள் தினமும் 3 தடவை 2 டீஸ்பூன் தேன் பருக வேண்டும் என்று முந்தைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
நம் வீடுகளில் பாட்டிகள், வீட்டில் யாருக்காவது உடம்புக்கு சரியில்லாமல் போனால் தேனில் மருந்தைக் கலந்து கொடுப்பார்கள். அதற்கு முக்கியக் காரணம், மருந்து கசக்காமல் இருப்பதற்கு அல்ல, மாறாக, தேன் ஒரு மகத்தான மருத்துவக் குணம் உடையது என்பதால்தான். நம்மவர்கள் தேனின் மகத்துவத்தை எப்போதோ உணர்ந்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். மேலைநாடுகளில் இப்போதுதான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.