ஆவணி மூலத்திருவிழா: கரூர் சித்தர் இன்று இரவு மானூருக்கு எழுந்தருளல்
நெல்லை: நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் கரூர் சித்தர் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு எழுந்தருளும் வைபவம் இன்றிரவு நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் சுவாமி அம்பாள் கரூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
நெல்லுக்கு வேலியிட்டு காத்து திருநெல்வேலி என பெயர் வரக்காரணம் அமையபெற்ற வரலாற்றுச் சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆவணி மூலத்திருவிழா ஆண்டுதோரும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி சுவாமி அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
9-ம் நாள் விழாவான இன்று இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் வீதியுலா சென்று சங்கரன்கோவில் வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலைச் சென்றடைகிறார்.
நாளை ஆவணி மூலத்திருநாள் இரவு 1 மணிக்கு சந்திரசேகரர், பவானி அம்மன், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி தேவி, அகஸ்தியர், குங்குனிய நயினார், உற்சவ மூர்த்திகள் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது.