31 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி
சென்னை: இந்திய டென்னிஸின் தொட்டில் என்று அழைக்கப்படும் சென்னை மாநகரில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியா, பிரேசில் இடையிலான உலகப் பிரிவு டேவிஸ் கோப்பைப் போட்டிகள் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடைசியாக இந்தியாவில் 1979ம் ஆண்டுதான் டேவிஸ் கோப்பைப் போட்டி நடந்தது. அப்போது நடந்த தொடரில் இந்தியா 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு தற்போதுதான் டேவிஸ் கோப்பைப் போட்டிகள் சென்னைக்கு வருகின்றன.
கடந்த ஆண்டே ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான டேவிஸ் கோப்பைப் போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வர மறுத்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது.
இந்தியா, பிரேசில் இடையிலான போட்டிக்கான டிரா, செப்டம்பர் 16ம் தேதி முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாள் முற்பகல் 11.30 மணிக்கு முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெறும். தொடர்ந்து 2வது ஒற்றையர் போட்டி நடைபெறும்.
செப்டம்பர் 18ம் தேதி மாலை 3 மணிக்கு இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெறும். பின்னர் 19ம் தேதி மாற்று ஒற்றையர் போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால், உலகப் பிரிவில் 16 அணிகளில் ஒன்றாக இந்தியா முன்னேற வாய்ப்புள்ளது.