புளியங்குடி பகுதியில் கரடிகள் படையெடுப்பு: பீதியில் மக்கள்
புளியங்குடி: புளியங்குடி வனப்பகுதியில் கரடிகள் படையெடுப்பால் மக்கள் பீதியில் உள்ளனர்.
புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், மிளா மற்றும் அரியவகை விலகினங்கள் ஏராளமாக உள்ளன. சொக்கப்பட்டி, தலையணை மலைப்பகுதிகளில் கரடிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. பெரும்பாலும் கோடை காலங்களில் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் விலையும் முந்திரிப் பழங்களை உண்பதற்காக கரடிகள் அங்கு வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தலையணை பகுதியில் கரடி ஒன்று செந்நாய் கூட்டத்தில் சிக்கி குதறப்பட்டு கிடந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டு ஈக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவற்றிடம் இருந்து தப்ப கரடிகள் அங்கிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து திறந்தவெளி பகுதியில் நடமாடி வருகின்றன. புளியங்குடி வெள்ளூரணி பகுதியைச் சேர்ந்த முகமது வாவா என்ற விவசாயி தோட்டத்தில் பட்ட பகலில் புகுந்த கரடி அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து குதறியது.
இதனால் நரியூத்து, செட்டிகுளம், தோணுகால்குளம், பெரிய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிணறுகளைக் காக்கும் காவலர்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதையடுத்து புளியங்குடி வனச்சரகர் மயில், வனக்காப்பாளர்கள் சங்கர் உள்ளிட்டவர்கள் செட்டிகுளம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சோதனை நடத்தினர். அப்போது பேச்சிமுத்து என்பவரது தோட்டத்தில் கரடி வந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
மேலும் தோட்ட பகுதியில் கரடி மற்றும் மற்ற விலங்குகள் வந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், காவலர்களுக்கு பாதுகாப்புக்காக பட்டாசு பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் வனச்சரகர் மயில் தெரிவித்தார்.