மண்டல பூஜை: சபரி்மலை கோயிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு நடக்கும் மண்டல கால பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜூவரரு முன்னிலையில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி கோயில் நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோயில் புதிய மேல்சாந்தியாக சசிநம்பூதிரி பொறுப்பேற்றுக் கொள்வார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 4 மணி அளவில் புதிய மேல்சாந்தி சசிநம்பூதிரி கோயில் நடை திறப்பார். நாளை முதல் 41 நாள் மண்டல கால பூஜை நடக்கும். டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.