துபாயில் உன்னிகிருஷ்ணன் இசை நிகழ்ச்சி: அனில் சீனிவாசன் பியானோ, புருஷோத்தமன் கஞ்சிரா
துபாய்: துபாயில் பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான உன்னிகிருஷ்ணன் இசை நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்தியா கிளப்பில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக துபாய் பிளேயர்ஸின் சார்பில் சிறிய நகைச்சுவை நாடகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரம் என்னும் தலைப்பினை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சியினை கலைமாமணி பி. உன்னிகிருஷ்ணன் நடத்தினார். இதில் அனில் சீனிவாசன் பியானோவும், புருஷோத்தமன் கஞ்சிராவும் வாசித்தனர்.
நாடகத்தில் நடித்தவர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ரமேஷ் ராமகிருஷ்ணன், ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் சித்தார்த் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.