தங்கம் வென்று அவதூறாகப் பேசியவர்களின் வாயை அடைத்துவிட்டேன் : ஜுவாலா
ஹைதராபாத்: காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வாங்கியதன் மூலம் தன்னைப் பற்றி அவதூராகப் பேசியவர்களின் வாயை அடைத்துவிட்டதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹமது அசாருதீனுடன் இணைத்து பல வதந்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜுவாலா கூறியதாவது,
என்னைப் பற்றி ஆதாரமற்ற கட்டுக் கதைகளை சிலர் பரப்பி வந்தனர். இதனால் நான் பெரிதும் வருத்தம் அடைந்தேன். இந்தக் கதைகளை பரப்பி வருபவர்கள் ஆந்திர மாநிலம் பேட்மிண்டன் அமைப்பு தான் ஆரம்பித்து வைத்ததாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் சொந்த மாநிலத்தவரே என்னை இழிவு படுத்துகின்றனர் என்பது தெரிந்தபோது வேதனையாக இருந்தது.
நான் வைராக்கியத்தோடு விளையாடினேன். தங்கம் வென்று அவர்களின் வாயை அடைத்துவிட்டேன் என்று அவர் கூறினார்.