மதுரை அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கோயில்!
புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அமரர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன. எம்.ஜி. ஆரை கடவுளாகவே வணங்கினர் நிறையபேர். இன்றும் அவரைக் கடவுளாக நினைத்து வணங்கும் அவரது 'பக்தர்கள்' ஏராளம் உள்ளனர்.
மதுரை அரும்பனூர் பகுபதியைச் சேர்ந்த ஜோதிடர் மாசானம் (47) . இவரும் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்தான்.
இவர் அரும்பானூர் பகுதியில் எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியுள்ளார். இந்த கோவிலில், மற்ற கோவில்களில் வழக்கமாக நடைபெறும் முக்கால பூசைகள் , சிறப்பு அபிஷேகம் போன்றவை நடத்தப்படுகின்றது.
மேலும், இந்த கோவில்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இருந்து தத்துவ பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கிறது.
இந்த கோவிலுக்கு பொது மக்கள் ஏராளமாக வந்து தரிசனம் செய்கின்றனர். சிலர் நேர்த்திக் கடன் செலுத்துவதும் நடக்கிறதாம்.
இதுகுறித்து மாசானம் கூறுகையில், "ஏழை மக்களின் ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். இந்த உலகிலிருந்து மறைந்தாலும், அவர் மக்கள் மனங்களில் வாழ்கிறார். மனிதராகப் பிறந்து மகான்களாக மறைந்த ஏசுநாதருக்கும் மகாத்மா காந்திக்கும் கோயில் இல்லையா... அப்படித்தான் எம்ஜிஆருக்கும் கோயில் கட்டியிருக்கிறோம்" என்றார்.