சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
காற்று மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலந்து கொண்டு, மாசை கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பித்தன.
தமிழகத்தின் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தொழிற்சாலைகளில் இருந்து மாசுபட்ட காற்றை நள்ளிரவிலும், அதிகாலையிலும் தான் அதிகமாக வெளியேற்றுகிறார்கள். இதை கண்காணிக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் நவீன யுக்திகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது.
மேலும், தமிழக அரசு அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாசடைந்த காற்றால் வாயு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நிமிடத்துக்கு நிமிடம் விவரங்கள் சேகரிக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கிறது. இது மட்டுமின்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
வாயு மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையான மாநிலமாகவும் திகழ்கிறது. எனவே, தமிழக அரசை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வாயு மண்டலத்தில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த வேண்டும் என்று அவர் தமிழக அரசை பாராட்டினார்.