இந்தியப் பெருங்கடலுக்கு தமிழர் பெருங்கடல்: தீர்மானம் நிறைவேற்ற மே 17 இயக்கம் கோரிக்கை
மதுரை: மே பதினேழு இயக்கம் சார்பில் இந்திய பெருங்கடலுக்கு தமிழர் பெருங்கடல் என்று பெயர் மாற்ற தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே பதினேழு இயக்கம் சார்பில் தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரை அரசடியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு பேரா. தொ. பரமசிவன் தலைமை தாங்கினார். தமிழ் வெப்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன், அருள்முருகன், புருசோத்தமன், லேனா. குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஈழப் போருக்கு பின்பு தமிழர்களின் செயல்பாடுகள், இலங்கை விஷயத்தில் உலக நாடுகளின் புவிசார் அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இறுதியில் தமிழக சட்டமன்றத்தில் இந்தியப் பெருங்கடலை "தமிழர் (தமிழன்) பெருங்கடல்" என்றும், "தமிழீழம்" தனிநாடு எனவும், இலங்கை அரசை "போர்குற்றம் புரிந்த அரசு" எனவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் "இசைப்பிரியா" மற்றும் அரசியல் போராளி கைதிகளை கொன்ற குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்பவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.