தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: அமைச்சர் சுரேஷ் ராஜன்
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்புரை அளித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் சாரல் திருவிழாவையும், அமைச்சர் பெரியகருப்பன் நிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்தனர். அமைச்சர் மைதீன் கான் குத்துவிளக்கேற்றினார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் சுற்றுலாத் துறை மூலம் கடந்த ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற் கட்டமாக சுற்றுலா தலங்களை கண்டறிந்து அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். தமிழகம் அமைதிபூர்வமாக திகழ்வதால் தான் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு 7 கோடியே 80 லட்சம் சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இதில் 23 லட்சத்து 69 ஆயிரம் பேர் வெளிநாட்டவர்கள். இந்த முன்னேற்றத்தால் தமிழக சுற்றுலாத் துறைக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது குற்றாலம் தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த சாரல் திருவிழாவுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.
பின்னர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில்,
குற்றாலத்தில் நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. முதன்முறையாக மத்திய அரசு சுற்றுலா நிதி முலம் ரூ. 4.62 கோடி வழங்கியுள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் பார்கிங் செய்ய இடவசதி செய்து தர வேண்டும். வனத்துறையிடம் உள்ள சிற்றருவியை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஐந்தருவி பைபாஸ் சாலையில் மரங்களை வெட்டி வீடுகளை கட்ட அனுமதிக்கக் கூடாது.
இந்த ஆண்டு சீசனில் மட்டும் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.