பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா-ராஜராஜன் நாணயம், தபால் தலை வெளியீடு
நேற்றுடன் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. மினி செம்மொழி மாநாடு போல கோலாகலமாக நடந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
நேற்று காலை 11 மணி அளவில் முதல்வர் கருணாநிதி அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கண்காட்சிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 அரங்குகளுக்கும் பேட்டரி கார் மூலம் சென்று பார்வையிட்டார்.
ஒவ்வொரு அரங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கருணாநிதியிடம் விளக்கி கூற, அதை கருணாநிதி ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார். சுமார் 1 மணி நேரம் அவர் கண்காட்சி அரங்குகளை சுற்றிப் பார்த்தார்.
கருணாநிதியுடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சுரேஷ்ராஜன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., தலைமை செயலாளர் மாலதி, சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
பின்னர் கருணாநிதி அங்கு இருந்து புறப்பட்டு சங்கம் ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தார். முன்னதாக கருணாநிதி கண்காட்சிக்கு சென்ற போது வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
பின்னர் நேற்று மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் கோபுரம் போன்று அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட மேடையில் நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை செயலாளர் சு.மாலதி வரவேற்று பேசினார். அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
விழாவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற 1000 நடன கலைஞர்களுக்கும் நேற்று வெளியிடப்பட்ட 5 ரூபாய் சிறப்பு நாணயங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்காக மொத்தம் 1000 நாணயங்களைக் கொண்ட பொற்கிழியை, முதல்வர் கருணாநிதி, பத்மா சுப்பிரமணியத்திடம் வழங்கினார்.
பெருமழை புலவர் சோமசுந்தரனார் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியையும் கருணாநிதி வழங்கினார்.
பின்னர் கருணாநிதி நிறைவு விழா பேருரையாற்றினார்.