தேய்பிறை அஷ்டமியில் ஆடிப்பெருக்கு: புதுத் தாலிக் கயிறு மாற்றலாமா என்று பெண்களுக்கு சந்தேகம்
சென்னை: ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் விசேஷமாக கொண்டாடப்படும் ஒன்று. அந்த நாளில் புது மணப் பெண்கள் புது தாலிக் கயிறு கட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு தேய்பிறை அஷ்டமி நாளன்று வருவதால் புது மணப்பெண்கள் புதுத்தாலி மாற்றுவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து பிரபல வாஸ்து பேராசிரியரும், ஜோதிடருமான யோகஸ்ரீ மணிபாரதி கூறியதாவது,
ஆகஸ்ட் 3-ம் தேதி அன்று வரும் தேய்பிறை அஷ்டமியை காலாஷ்டமி என்பர். இந் நாளில் தான் ஆடிப்பெருக்கு வருகிறது. அன்று பரணி நட்சத்திரமாக இருப்பதாலும், சந்திரன் என்ற வீட்டின் அதிபதி செவ்வாயும், பரணி நட்சத்திற்கு சொந்தக்காரரான சுக்கிரனும் சனியோடு கூடி கன்னி ராசியில் இருப்பதாலும், குரு 7-ம் பார்வையாக மூவரையும் பார்ப்பதாலும் இந்நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கிறது.
ஆதலால், அஷ்டமி அன்று எப்படி புதுத் தாலிக்கயிறு கட்டிக் கொள்வது என்று புது மணப்பெண்கள் பயப்பட வேண்டியதில்லை. எப்பொழுதும் போல் புது தாலிக் கயிறு கட்டிக்கொள்ளலாம். அவ்வாறு கட்டும்போது தாலிக் கயிற்றில் புது நகை, காசு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
அஷ்டமி அன்று புது தாலிக் கயிறு கட்டிக் கொண்டால் தோஷம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணும் பெண்கள் சிவன் கோவிலில் முருகன் அருகே உள்ள வள்ளிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் கால பைரவருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அதன் பிறகு ஒரு வெள்ளிப் பொட்டு அல்லது வெள்ளி தாலியை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும். பின்னர் புது தாலி கயிற்றை கட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும். சந்திரனின் ஆட்சி மாதமான ஆடியில் வரும் ஆடிப்பெருக்கு அனேக நன்மைகளை மனித குலத்திற்கு அளிக்க உள்ளது. எனவே, ஆடிப்பெருக்கன்று நடத்தும் வழிபாடு பல்வேறு பலன்களை தரும் என்று அவர் கூறினார்.