பங்குனி உத்திரம் - இன்று பழனியில் தேரோட்டம்
பழனி முருகன் தலங்களின் முக்கிய விழாவான பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனியில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
பங்குனி உத்திரமான இன்று அதிகாலை நாலரை மணிக்கு சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். 6 மணிக்கு தீர்த்தம் வழங்கல் நடைபெற்றது.
பின்னர் தந்தப் பல்லக்கில் திருவாவினன்குடியில் சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 12 மணி முதல் 12.45 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 9 மணிக்கு தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டத்தையொட்டி பழனியில் பக்தர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனி வந்த வண்ணம் உள்ளனர்.
பழனி கோவில் கிரி வீதிகள், திருஆவினன்குடி, பெரிய நாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் திடும், நகார், கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் விண்ணதிர முழங்க, பக்தி பரவசத்துடன் காவடியாட்டம் ஆடி மகிழ்கின்றனர்.