குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் மின்தடையால் மக்கள் அவதி
தென்காசி: குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அடிக்கடி இரவில் மின்தடை ஏற்படுவதால் அங்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. ஆனால் மின்வாரியம் காட்டும் அலட்சியத்தால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஐந்தருவியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் அருவியில் குளித்த பெண்களும், குழந்தைகளும் இருளில் சிக்கி கூப்பாடு போட்டனர். பல நேரங்களில் இதுபோல் நடக்கிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து இரவு பணியில் இரண்டு மின் ஊழியர்களை மின்வாரியம் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் நியமிக்கவில்லை. குற்றாலத்தை போல் எக்ஸ்பிரஸ் பீடர் லைன் ஐந்தருவிக்கு கொண்டுவரப்படவில்லை.
மேலும் குற்றாலம், ஐந்தருவி பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. காற்று வேகமாக வீசும் வேளையில் வீடுகளுக்கு செல்லும் வயர்கள் ஓன்றுடன் ஓன்று உராய்ந்து மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்காக உள்ள செப்பரேட்டர்களை முறையாக பொருத்தவில்லை.
மின் வாரியத்தினரின் இதுபோன்ற அலட்சியத்தால் ஐந்தருவி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.