டெல்லி காமன்வெல்த் போட்டி-தொடங்கி வைக்க ராணி எலிசபெத் மாட்டார்!
லண்டன்: 44 ஆண்டு கால காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடங்கி வைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதில் இளவரசர் சார்லஸ், போட்டியைத் தொடங்கி வைப்பாராம். அன்றைய தினம் ராணியின் செய்தி படிக்கப்படுமாம்.
கடும் வேலைப் பளு காரணமாக ராணி டெல்லி காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் இளவரசர் சார்லஸ் டெல்லி செல்வார். ராணியின் செய்தியை அவரே வாசிப்பார் என்று தெரிவித்துள்ளது.
பக்கிங்காம் அரண்மனைச் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளை ராணி ஒத்துக் கொண்டிருப்பதால் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்க போக முடியாத நிலையில் ராணி இருக்கிறார் என்றார்.
இங்கிலாந்து நாட்டிடம் முன்பு அடிமைகளாக இருந்த நாடுகள் இணைந்த அமைப்புதான் இந்த காமன்வெல்த். காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் போட்டிகள், உலக அளவில் பிரபலமான சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.