இங்கிலாந்துக்குள் ஊடுறுவிய 20 அழகிகள்-உளவு பார்க்க அனுப்பியது ரஷ்யா
லண்டன்: இங்கிலாந்துக்குள் உளவு பார்க்கும் பணிக்காக 20 அழகிகளை ரஷ்யா ஈடுபடுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது 2 அழகிகளை இங்கிலாந்து உளவுத்துறையும், காவல்துறையும் கைது செய்துள்ளன.லண்டனைச் சேர்ந்த சண்டே டைம்ஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரிடம் உளவு பார்க்கும் பணிகள் நடந்து உள்ளன.
இந்தப் பணிக்காகவே இந்த 20 அழகிகளையும் ஏவி விட்டுள்ளது ரஷ்யா. இந்த அழகிகள், சம்பந்தப்பட்டவர்களை அணுகி அவர்களுக்கு தாராளமாக செக்ஸ் விருந்து வைத்து தகவல்களைக் கறந்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
இந்த உளவு அழகிக் கும்பலுக்கு அன்னா சாப்மேன் என்பவர்தான் தலைவி போல செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தில் படித்து வரும் ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன், ஆர்மீனியா ஆகிய முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளைச் சேர்ந்த அழகான மாணவிகளை தேர்ந்தெடுத்து உளவுப் பணிக்கு ஈடுபடுத்தியுள்ளார். இதற்காக இவர்களுக்குப் பெரும் பணம் சம்பளம் போல தரப்பட்டுள்ளதாம்.
இந்த செய்தியால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யார் அந்த 20 அழகிகள் என்ற பரபரப்பும் கூடியுள்ளது. அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
போலீஸ் வேட்டையில் அன்னாவும், 25 வயதான காத்யா ஜாடுலிவேட்டரும் கைதாகியுள்ளனர். இருவரும் நாடு கடத்தப்படுவர் என்று தெரிகிறது. அன்னா இங்கிலாந்து எம்.பி. மைக் ஹென்காக்கிடமிருந்து பல்வேறு தகவல்களைக் கறந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹென்காக்கிடம் உதவியாளராக செயல்பட்டவர் அன்னா. இந்த சர்ச்சை குறித்து ஹென்காக் கூறுகையில், அன்னா ஒரு நிரபராதி என்றே நினைக்கிறேன். அவர் அப்பாவி என்றே நினைக்கிறேன். தவறான தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.
அன்னா ஒரு ரஷ்ய உளவாளி என்று எனக்கு எந்தத் தகவலும் காவல்துறையிடமிருந்து வரவில்லை என்று கூறியுள்ளார் ஹென்காக்.
காத்யா ரஷ்ய உளவு நிறுவனத்திற்காக ரகசிய ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம்ஐ5 கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக ரஷ்ய அழகிகள் சிலர் பிடிபட்டது நினைவிருக்கலாம். தற்போது இங்கிலாந்திலும் அவர்கள் ஊடுறுவியிருப்பது இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவரோவ் கூறுகையில், அன்னா சாப்மேன் என்பவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த அன்னா உண்மையிலேயே ரஷ்யர்தானா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
உண்மையைக் கண்டறிய நாங்கள் முயற்சித்து வருகிறோம். அன்னா ரஷ்யராக இருந்தால் அவருக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளும் அளிக்கப்படும்.
இந்த சம்பவத்தால் இங்கிலாந்துடனான ரஷ்ய உறவுகளில் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் இந்த உறவு ஏற்பட்டு விடாமல் தடுக்க சிலர் முனைகிறார்கள்.
ரஷ்யாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நல்லுறழு ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும்போதெல்லாம் அதைத் தடுக்க சிலர் முனைகின்றனர் என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரத்திற்கு தற்போது அரசியல் முலாம் பூசி பார்க்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரம்தான் 2018ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றது ரஷ்யா. இந்த உரிமை இங்கிலாந்துக்கே கிடைக்கும் என்று பெரும்பாலானாரும் நம்பியிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரஷ்யா அதைத் தட்டிச் சென்று விட்டது. இனால் ரஷ்யா மீது பொறாமை கொண்டு அவதூறாக இப்படி ஒரு செய்தியை இங்கிலாந்து பரப்பி விடுவதாக ரஷ்யத் தரப்பு குற்றண் சாட்டியுள்ளது.