தென்னகத்தைக் கலக்கும் மலைச் சித்தர் - சொன்னால் மழை வருகிறதாம்!
மனிதனுக்கும் இயற்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
உயிரோட்டமுள்ள நதியை கூட ஓடவிடாமல் நிறுத்திய முன்னோர்கள் வாழ்ந்ததாகவும், சினம் கொண்டு, விட்ட சாபத்தால் சிலையாய் போனவர்களும் இருந்ததாக இன்றும் நம்பில் செவி வழி செய்தியால் பண்டைய வரலாறு பேசப்படுகிறது.
மதுரையில் பாண்டிய மாமன்னன் ஆட்சியில் தன் கணவன் கோவலனுக்கு கொடுந்தண்டனை வழங்கியதற்காக கருங்கயற்கண்ணா கள்வனா என் கணவன் கள்வனே அல்ல. என்று கூறி, மதுரை வீதிகளில் நீதி தவறிய நெடுஞ்செழிய மன்னனுக்கு பதிலளிக்கும் வண்ணம் கண்ணகி சுட்டெரிக்கும் சூரியனிடம் நீதி கேட்டாள். மதுரை மண்ணுக்கு சாபமிட்டாள். எரிந்தது சாம்ராஜ்யம். கண்ணகியின் வாக்கு வேண்டுதல், உண்மை தன்மை அனைத்தும் ஒரு சேர்ந்ததின் விளைவுதான் பாண்டிய ராம்ராஜ்யம் அழிவுற்ற வரலாறு.
இது அன்றைய வாழ்க்கை முறை. இதோ இன்று இங்கே 56 வயது நிரம்பிய 5 அடி உயரமே உள்ள கருத்த எளிமையான வெள்ளை உடை தரித்த ஒருவர் வானத்தை நோக்கி கை உயர்த்தி கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் நின்று ஏதோ மந்திரங்களை உச்சரிக்கிறார். திடீரென தரையில் மண்டியிட்டு மீண்டும் அதே போல் பிரார்த்தனை செய்கிறார். பின் வானை நோக்கி வணங்கி திரும்புகிறார்.
நாம் சற்று தொலைவில் நின்று இவரை கவனித்து விட்டு அவர் அருகே சென்று நம்மை அறிமுகம் செய்து கொண்டு பேச்சு கொடுத்தோம்.
ஐயா, எதற்காக நீங்கள் ஊருக்கு வெளியே உள்ள கோயில் முன்பு நின்று இப்படி பிரார்த்தனை செய்கிறீர்களே, என்ன வேண்டுதல்?
என் பெயர் பாலகிருஷ்ணன், எனக்கு 56 வயது ஆகிறது. என்னை மலைசித்தர் என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். திருமணம் ஆகவில்லை. குடும்பம் என்று எதுவும் இல்லை.
சொந்த ஊரில் பேனா 'நிப்' தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் லாட்டரியில் ரூ.1 லட்சம் பரிசு கிடைத்தது. அதை வைத்து பேனா 'நிப்' தயாரிக்கும் தொழில் சொந்தமாக செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால்
இறை நாட்டம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து நிறைய ஆன்மீக நூல்கள், ஜோதிட நூல்கள் எல்லாம் படித்தேன். அப்போதுதான் பழங்கால இடைக்காட்டு சித்தரின் வாழ்க்கை வரலாறு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து மழைக்காக வேண்டினால் மழை பொழியும் இறைவரம் எனக்குக் கிடைத்தது (!). அற்புத வரத்தை பயன்படுத்தி மழை இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் சென்று மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை செய்து விட்டு வருவேன். அங்கு மழை பெய்யும். இந்த ஊருக்கு அதற்காகதான் வந்துள்ளேன் என்றார்.
அது எப்படிங்க, கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும். நீங்கள் மாசி, பங்குனி, சித்திரை மாதத்தில் மழை வரவழைப்பேன் என்கிறீர்கள்...
அதற்கு அவர், இந்த 3 மாதம் மட்டுமல்ல, வருடத்தில் 12 மாதமும் மாதத்தில் 3 முறை என்னால் மழையை வரவழைக்க முடியும். நான் பொய் சொல்லவில்லை. உண்மையைதான் சொல்கிறேன் என்றார்.
நாமும் விடாமல், அது எப்படி உங்களால் சத்தியமாகும் என்றோம்.
அதற்கு அவர், நான் பூமியின் வெப்பத்தை உள்வாங்கியபடி குளிர்ந்த வகையான 9 இயற்கை பழவகைகளை உட்கொண்டு மலைப் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நதியிலும், கடல் பகுதிக்கு சென்று அங்கு எண்ணெய் தேய்த்து குளித்து உடம்பிலுள்ள 9 துவாரங்களை சுத்தப்படுத்தி கொள்வேன்.
உடம்பிலுள்ள 9 துவாரங்களும் சுத்தமான பின்பு ஒன்பது நவக்கிரகங்களின் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கும். அதன்பிறகு இயற்கையோடு தன்னை உள் உணர்ந்து இயற்கையோடு ஐக்கியமாகி விடுவேன். பின் சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுடன் கலந்து அவர்களுடைய முழுமையான ஆசீர்வாதத்தை பெறுவேன். அதன்பின் தான் மழையை வரவழைக்கிறேன் என்றார் சீரியசாக.
தான் எப்படி பிரார்த்தனை செய்வேன் என்பதையும் நமக்கு அவர் 'டெமோ' செய்து காட்டினார். பின்னர் தொடர்ந்து பேசியபோது,
நான் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டைக்கு வரவேண்டும் என்று ஒரு ஆன்மீக அன்பர் அழைத்தார். அவர் சொல்லிதான் தங்கியுள்ளேன். இங்கு வருவதற்கு முன் திருச்செந்தூர் கடலில் நீராடி, குற்றாலம் வந்து அருவியிலும் நீராடிய பின்னர்தான் இந்த (நித்திய கல்யாணி அம்மன்) கோவில் முன்பு நி்ன்று பிரார்த்தனை செய்தேன்.
நாளை முதல் கன்னியாகுமரியில் பிரார்த்தனையில் ஈடுபட உள்ளேன். நான் இன்று செய்யும் பிரார்த்தனை முறைகள் அனைத்தும் இடைக்கால சித்தர் அக்காலத்தில் மழை பொழிய செய்த முறைதான்.
இன்றல்ல.. நேற்றல்ல கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகம், கேரளா ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்து மழையை வரவழைத்து வருகிறேன். ஒரு பகுதிக்கு சென்று மழையை வரவழைக்க குறைந்த பட்சம் ரூ.2,000 எனக்குld தேவைப்படுகிறது.
எனக்கு இறைவன் கொடுத்த இந்த பிறவி அதிர்ஷ்டம் தான் எனக்கு பெரியது என்ற அவர் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வேணடி பிரார்த்தனை செய்ததும், அதன்பின் மழை வந்ததும் குறித்து அந்தந்த பகுதி உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளின் தொகுப்பு, நேர்முக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு தொகுப்புகளை நம்மிடம் காட்டினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இம்மாதத்தில் தமிழக அளவில் நிச்சயமாக புயல் மழை உருவாகும். இம்மழை பலநாள் நீடிக்கும். பூமிக்கு உணவுதான் மழை. மனிதனுக்கு 3 வேளை உணவு என்பது அத்தியாவசியம். அதுபோல் பூமிக்கு மாதத்தில் 3 முறை மழை அவசியம். நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் என்று இன்று நம்மில் பேசப்படுகிறது. அது அப்படியல்ல.
நல்ல ஊருக்கு பெய்யும் மழை எல்லா ஊருக்கும் சேர்த்துதான் என்பதை தான் நாம் பேச்சுவாக்கில் மாற்றி விட்டோம். வேண்டுமெனில் அரசு எனது தவ வலிமையை பரிசோதிக்கட்டும். உண்மையை அறிந்த பின் எனக்கு உதவிகள் செய்யட்டும். யாரிடமும் நான் காசு பெற்றதுமில்லை, பணத்திற்காக நான் செய்ததுமில்லை என்றார்.
இதையடுத்து அவர் கன்னியாகுமரி நோக்கி கிளம்பினார்.
'தலைசுற்றியபடி' நாமும் நடையைக் கட்டினோம்.