சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்- ஒகனேக்கலில் கூட்ட நெரிசல்
தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை களை கட்டியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இந்த நிலையில் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஒகனேக்கலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்,பல்லாயிரக்கணக்கானோர் ஒகனேக்கலில் குவிந்து விட்டனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒகனேக்கலே ஸ்தம்பித்துப் போனது.
சினி பால்ஸ், ஐந்தருவி, பெரிய அருவி உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ரசித்தனர். மேலும் அருவியில் குளித்தும், படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மணல் திட்டு பகுதிகளில் ஆங்காங்கே சமையல் செய்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் பிலிகுண்டு, முதலை பண்ணை, பரிசல் துறை, தொங்கு பாலம், ஆற்றுப்படுகைகள், பார்வை கோபுரம், மணல் திட்டு, உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா, தமிழ்நாடு ஓட்டல் உள்பட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது.
மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எண்ணை தேய்த்து மசாஜ் செய்து அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் பஸ், வேன்களில் அதிக அளவில் வந்ததால் அவர்கள் வந்த வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.