ஏன் இந்த இரட்டை நிலை?
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்தியர்களைவிட குறைவான சம்பளத்தில் வாழ்கிறார்கள். சம்பாதித்ததில் பெரும் செலவாக தாய் நாட்டிலிருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள ஆகும் போன் செலவே உள்ளது.
நம் நாட்டிலிருந்து சர்வதேச போன் அழைப்புகளுக்கான கட்டணத்தைக் குறைக்கும் மத்திய அரசு வளைகுடா நாடுகளுக்கு ஒரு அளவீடும், அமெரிக்காவுக்கு இன்னொரு அளவீடும் வைத்திருப்பது வளைகுடா இந்தியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுவதையே காட்டுகிறது.
இரட்டைக் குடியுரிமைக் கொள்கையிலும் நமது மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பாஜக அரசாக இருந்தாலும் இதே நிலைப்பாடே தொடர்கிறது!!