குட்டீஸ்களுக்கு இன்னொரு சேனல்..'கலைஞர் சித்திரம்'
சன் டிவிக்கும் திமுகவுக்கும் இடையே பிரச்சினை வெடித்து பெரும் புயல் கிளம்பியதைத் தொடர்ந்து திமுக சார்பில் தொடங்கப்பட்ட சானல் கலைஞர் டிவி. தற்போது இந்தக் குழுமத்தில், கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், கலைஞர் இசையருவி, கலைஞர் சிரிப்பொலி, கலைஞர் ஆசியா ஆகிய சானல்கள் உள்ளன.
இந்த நிலையில் குழந்தைகளுக்காக ஒரு சானலை தொடங்குகிறது கலைஞர் டிவி. கலைஞர் சித்திரம் என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சன் குழுமத்திலிருந்து ஆதித்யா தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே கலைஞர் சிரிப்பொலி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சன் டிவியின் சுட்டி டிவிக்குப் போட்டியாக கலைஞர் சித்திரம் தொடங்கப்படுகிறது.
சித்திரம் குறித்து கலைஞர் டிவி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2007ம் ஆண்டு கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இசை, செய்தி, காமெடி ஆகிய பிரிவுகளில் சானல்கள் தொடங்கப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கான டிவி தொடங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கார்ட்டூன் படங்கள் கலைஞர் சித்திரத்தில் இடம் பெறும். அனிமேஷன், கார்ட்டூன் நிழ்ச்சிகளுக்கு இந்த சானலில் முக்கியத்துவம் தரப்படும்.
சோடியாக் கிங்டம், குங்ஃபூ ஸ்டோரி, ரஃப்ஸ் பாட்ச் ஆகியவை சித்திரம் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளாக அமையும்.
இதுதவிர குழந்தைகளே தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும். தமிழ்க் கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை சிறார்களுக்கு போதிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். உதாரணத்திற்கு, திருக்குறளை குழந்தைகள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சி இடம் பெறும்.
குவி்ஸ் நிகழ்ச்சிகள், சிறப்பு செய்திஅறிக்கைகள் ஆகியவையும் இடம் பெறும் என்றார் அவர்.