கருணாநிதியின் 12 தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியீடு!
சென்னை: முதல்வர் கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட 12 படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளன.
இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி நாளை சென்னையில் வெளியிடுகிறார்.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முதல்வரின் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பு குழுத் தலைவருமான .திருவாசகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பாரதியார், பாரதிதாசன் ஆகியோரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இப்போது அந்த வரிசையில் முதல்வர் கருணாநிதியின் 12 படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
முதல்வர் எழுதிய தொல்காப்பியப் பூங்கா, காலப் பேழையும் கவிதைச் சாவியும், கவிதை மழை -தொகுதி 1, கவிதை மழை - தொகுதி 2, கவிதை மழை-தொகுதி 3, தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், பராசக்தி மற்றும் மனோகரா, பூம்புகார் மற்றும் ஓரங்க நாடகங்கள், கலைஞரின் சிறு கதைகள் என 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த நூல்கள் அனைத்துப் பல்கலைக்கழக நூலகங்களிலும் வைக்கப்படும். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் 31ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முதல்வரின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிடுகிறார்.
முதல் பிரதியை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பெற்றுக் கொள்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி, பன்னாட்டு தமிழ் இணையக் கழகத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் பர்னாலா தலைமை வகிக்கிறார்.