நோவா பேழையின் மிச்சம் துருக்கி மலையில் கண்டுபிடிப்பு?
கிறிஸ்தவ ஆய்வாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேழையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தக் கூற்றை பலரும் நிராகரித்துள்ளனர்.
தான் உருவாக்கிய உலகில் அக்கிரமங்கள் பெருகியதைப் பார்த்த கடவுள், நோவாவை அழைத்து நீ ஒரு பேழையை உண்டாக்கு. அதனுள் நீயும், உனது குடும்பத்தாரும் போய் இருந்து கொள்ளுங்களள். இந்த உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், தாவர வகைகளில் சிறந்தவற்றை ஒவ்வொரு ஜோடியாக எடுத்து உன்னுடன் அந்த பேழைக்குள் வைத்துக்கொள். நான் உலகில் பிரளயத்தை ஏற்படுத்தப் போகிறேன். அதிலிருந்து நீயும் பிற உயிரினங்களும் தப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார் என்று பைபிள் கூறுகிறது.
அன்று நோவா உருவாக்கிய பேழையின் ஒரு பகுதியைத்தான் தற்போது துருக்கி மலைப் பகுதியில் புதைந்த நிலையில் கண்டுபிடித்திருப்பதாக கூறியுள்ளனர் கிறிஸ்தவ ஆய்வாளர்கள்.
அராரத் பனிமலையின் அடிப் பகுதியில் இந்த பேழை புதைந்திருக்கிறதாம். ஆனால் இதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுகுறித்து மத்திய கிழக்கு தொடர்பான ஆய்வுகளில் பிரபலமானவரான பால் ஜிம்ஸன்கி கூறுகையில், இப்படி ஒரு ஆய்வு நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. நோவாவின் பேழை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் எனக்குத் தகவல் இல்லை என்றார்.
இருப்பினும் துருக்கி மற்றும் சீனாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அடங்கிய குழுவினர் ஹாங்காங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது 100 சதவீதம் நோவாவின் பேழை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் 99.9 சதவீதம் இது பேழையாக இருக்கலாம் என உறுதியாக நம்புகிறோம் என்றனர்.
ஏற்கனவே ஈரானிலும் இதேபோல நோவாவின் பேழை காணப்பட்டதாக முன்பு ஒரு தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த குடியிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அங்குதான் இயேசுநாதர் வாழ்ந்தார். அது இயேசுநாதரின் வீடாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோவாவின் பேழை கடவுள் உருவாக்கிய பெரும் வெள்ளத்தில் நீந்தி கடைசியில் அராரத் மலையில் வந்து நின்றதாக பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் அராரத் மலை, அனைத்து கிறிஸ்தவர்களின் ஆர்வத்தையும் நீண்ட காலமாக ஈர்த்து வருகிறது.