கோனார்க் ஆலயத்தில் மீண்டும் சூரிய வழிபாடு இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
ராஜ்யசபாவில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறியதாவது:
ஒரிசாவின் பழம்பெருமை வாய்ந்த கோனார்க் ஆலயத்தில் பக்தர்கள் சூரியனை வழிபடுவதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகளவு ஏற்பட்டதன் காரணமாக வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் வழிபாட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
எனினும் உலக புராதன சின்னமாக போற்றப்படும் இந்த ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் சூரிய வழிபாட்டை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் உள்ளே கற்கள் பெயர்ந்து விழுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி தகவல் இல்லை.
இது தொடர்பாக மாநில அரசிடமிருந்து உரிய விளக்கம் பெறப்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்ததாக அதில் தகவல் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.