அதி தீவிர மின்தடை- சொந்த ஊர்களுக்குப் போனவர்கள் சென்னைக்குத் திரும்பும் வினோதம்
அந்த விசித்திரம் – மின்தடைதான். மின்தடை என்பது தமிழகம் முழுவதும் என்று இருந்தால் பரவாயில்லை. ஆனால் தலைநகர் சென்னையில் மட்டும் மின் தடை பெருமளவில் இல்லை. அதேசமயம், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஷிப்ட் போட்டு மணிக்கணக்காக மின்சாரத்தை நிறுத்தி வருகின்றனர்.
பெரிய அளவில் மின் தடை இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்ததோடு நின்று விட்டார். ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் இந்த பல மணி நேர மின்தடையால்.
தமிழகத்தின் இதர பகுதிகள் என்று கூறும்போது கிராமங்களை அதில் சேர்க்கவே முடியவில்லை. காரணம் அங்கெல்லாம் பல மணி நேரங்களுக்கு மின்சாரமே வருவதில்லை.
இந்த மின்தடையால் சென்னையிலிருந்து தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளோர் பெரும் கடுப்படைந்து, பேசாமல் சென்னைக்கேப் போய் விடலாம் என திரும்பத் தொடங்கியுள்ளனராம். இப்படி ஒரு பிரச்சினை இதுவரை தமிழகம் சந்தித்திராதது என்பதால் விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் குழந்தை குட்டிகளுடன் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ள சென்னைவாசிகளை சொந்தம், பந்தங்களை விட மின்தடைதான் பெரிதான வரவேற்பைக் கொடுத்து கடுப்பை ஏற்றி வருகிறதாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் மின்சாரத் தடை அமல்படுத்தப்படுகிறது என்பதால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர் சொந்த ஊர்களுக்குச் சென்ற அப்பாவி மக்கள்.
இதற்கு சென்னையில் இருந்திருந்தால் கரண்ட்டாவது இருந்திருக்கும், அலுவலகத்தில் ஏசியிலே இருந்திருக்கலாம், வீட்டில் இருந்தால் மின்விசிறியையாவது இயக்கி நிம்மதியாக இருந்திருக்கலாம் போலிருக்கே என்று மக்கள் அலுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் வெயில், மறுபக்கம் மின்தடை என இரு பக்க தாக்குதலால் சொந்த ஊர்களுக்குப் போன சென்னை மக்கள் வெளியிலும் போக முடியாமல், வீட்டுக்குள்ளும் இருக்க முடியாமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே இந்தக் கோடை காலத்தை பேசாமல் சென்னையிலேயே வெயிலோடு, வெயிலாக கொண்டாடி விட்டுப் போவதே நல்லது என்பதே இந்த செய்தியின் மூலம் கிடைத்துள்ள நீதியாகும்.