பாபர் மசூதி இடிப்பு தினம்-சபரி்மலையில் இன்று செல்போனுக்கு தடை
சபரிமலை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று சபரிமலையில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டலகால பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நெரிசலை தவிர்க்க பக்தர்கள் ஆங்கங்கே தடுத்து நிறுத்தப்பட்டு சிறு சிறு குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கூட்டம் காரணமாக சபரிமலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதற்கிடையே இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்றும் இன்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரி்மலையைச் சுற்றி அதிவேக அதிரடி படை, கமண்டோ வீரர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.