பஸ்-ரயில் நிலையங்களில் செம்மொழி மாநாட்டு பாடல்
சென்னை: பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் செம்மொழி மாநாட்டுப் பாடல் திரையிடப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.
இந்தப் பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தப் பாடலை விளம்பரப்படுத்துவது தொடர்பான நிருபர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் பரிதி இளம்வழுதி,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செம்மொழி பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகையில், செம்மொழி மாநாட்டுப் பாடல் மக்களைச் சென்று சேர வேண்டும். உலகமெங்கும் தமிழர் வாழும் இடமெல்லாம் இந்தப் பாடல் ஒலிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றார்.
வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, திரையரங்குகளில் செம்மொழி மாநாட்டுப் பாடல் திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.