வைரமுத்துவின் இணையதளம் இணையப் பூங்கா அறிமுகம்
இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திரைப்பாடல்கள் வழியாகவும், படைப்பு நூல்கள் வழியாகவும், மேடைப்பேச்சுகள் வழியாகவும் தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர் கவிப்பேரரசர் வைரமுத்து ஆவார். இவரின் பன்முகப் பணிகளை இனி உலகத் தமிழர்கள் தடையில்லாமல் இணையம் வழியாக அறிந்து மகிழலாம்.
கவிப்பேரரசர் அவர்கள் தமிழகம் முழுவதும் இணையதளச் சிறப்புகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட உள்ளார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தமிழ் இணைய அறிமுகத் தேவையை வலியுறுத்தி இனிப் பேசவும் எழுதவும் உள்ளார்கள்.
தமிழ் இணையத்துறையில் ஆக்கப்பணிகளுக்கு உதவ முன்வந்துள்ள கவிப்பேரரசர் அவர்களை வணங்கி வரவேற்பதுடன், அவர்கள் புகழ்பரப்பும் இணையதளம் உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தமிழ்மணம் பரப்பவேண்டும் என்ற வேட்கையையும் வெளிப்படுத்துகின்றேன்.
இணையப் பூங்கா இணையதளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ' ஆயிரம் பாடல்கள் ' புத்தக வெளியீட்டு விழா(02.01.2011,சென்னை) நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்போடு தன் பணியினைத் தொடங்குகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆயிரம்பாடல்கள் நூலினை வெளியிட திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன் இருவரும் முதல் படியினைப் பெற்றுக்கொள்கின்றனர். தமிழ்த்திரையுலகமே கலந்து கொள்ளும் திரை இலக்கியத் திருவிழாவாகச் சென்னையில் இது நடைபெற உள்ளது. உலகத் தமிழர்களின் இல்லங்களுக்கு இணையப்பூங்கா நேரலையாக நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
இணையப்பூங்காவின் மற்ற உட்பிரிவுகளான கவிஞரின் பக்கம், கண்மணிப்பூங்கா, திரைப்பூங்கா, (வெள்ளித்திரை-சின்னத்திரை), இசைப்பூங்கா, அரசியல் பூங்கா, இலக்கியப்பூங்கா, கவிதைப் பூங்கா, அங்காடிப் பூங்கா, கட்டுரைப் பூங்கா,சமுதாயப் பூங்கா, போன்றவை தைத் திருநாளிலிருந்து செயல்படும்.
நன்றி: http://muelangovan.blogspot.com