ஆரோக்கிய உலகம் அமைய தூய்மையான தண்ணீர்!
பூமி பரப்பில் நீரின் இருப்பு 97 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது.
இந்த நீரின் தன்மையும் மனித சமுதாய வளர்ச்சியின் பக்க விளைவுகளால் மாசுபடத் தொடங்கியுள்ளது. எனவே பூமியில் இருக்கும் நீர் மாசடைந்துவிட்டால் மனித வாழ்க்கை பெரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்தவும், அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கும், குறிப்பாக இளைய சமூகத்திற்கு தெரியப்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்க ஐநா முடிவு செய்தது.
இதன்படி கடந்த 1992ம் ஆண்டு ஐநா சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, இதுவரை தொடந்து மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் ஐநா கிளை அமைப்புகள் தூய்மையான தண்ணீர் குறித்த பிரச்சார பணிகளில் இன்று ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தாண்டு தண்ணீர் தினத்துக்கான நோக்கம், 'ஆரோக்கியமான உலகத்துக்கு தூய்மையான தண்ணீர்' என ஐநா அறிவித்துள்ளது.