கன்னியாகுமரியில் ஹோமியோபதி பல்கலைக்கழகம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹோமியோபதி மருத்துவத்திற்கென தனி பல்கலைக்கழகம் துவங்கப்படவுள்ளது.
சட்டசபையில் ஆளுநர் உரையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் நோக்கம் ஆகும். அதன்படி ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படவிருக்கிறது.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தின்படி இனி வரும் காலத்தில் தமிழகத்தில் தகுதியான மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் தான் சித்த மருத்துவத்தின் தாயகமாக கருதப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது.
இந்த பாரம்பரிய மருத்துவங்களை வளர்க்கும் வகையில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து அதன்கீழ் தற்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளும் கொண்டு வரப்படும்.
இந்தப் பல்கலைக்கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.