சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு : 18-ம் படி ஏறி தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சபரிமலையில் மகர விளக்கிற்காக தினந்தோறும் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள் தரிசனத்திற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையி்ல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடையும் பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பி விடுகின்றனர். ஏற்கனவே கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஐயப்ப சாமியை தரிசிக்க அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நடை மதியம் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் படி அதிகாலை 4 மணி முதல் மாலை 3 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.50 மணி வரை தரிசனத்திற்கு நடையை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பக்தர்கள் 18-ம் படி ஏறி ஐயப்ப சாமியை தரிசிக்க நேற்று முதல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படி ஏறிச் சென்று தரிசனம் செய்ய போலீசார் உதவி வருகிறார்கள்.