சந்திர கிரணம்: காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை சிறப்பு பூஜைகள்
ஹைதராபாத்: காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
சந்திர கிரகணம், சூரிய கிரகணம் உள்ளிட்டவை ஏற்படும் போது, பெரும்பாலான கோவில்கள் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், நாளை சந்திரகிரகணம் ஏற்படுகிறது. மாலை 6.14 மணி முதல் இரவு 9.47 மணி வரை இது இருக்கும். அதிலும் முழு சந்திர கிரகணம் இரவு 7.36 மணி முதல் 8.28 மணி வரை மொத்தம் 51 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
நாளை சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி கோவில் பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரை மூடப்படும். அதன் பிறகு கோவிலில் கிரகண பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் திறக்கப்படும். மேலும் திருப்பதி கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், சந்திர கிரகணத்தின் போது, வாயு லிங்கேஸ்வருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இந்த கிரகணம் பவுர்ணமியில் துவங்கி பிரதமை திதியில் வருகின்றது. சந்திர கிரகணத்தை யொட்டி நாளை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை காளகஸ்தி கோவிலில் கிரகண சிறப்பு பரிகார பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெறும். இந்த பூஜைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்ள உள்ளதால், கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.