சபரிமலையில் பணியின்போது போதை-எஸ்ஐ உள்பட் 3 போலீசார் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மது அருந்தி விட்டு பணிக்கு வந்த எஸ்ஐ உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையையொட்டி தற்போது வரலாறு காணாத கூட்டம் காணப்படுகிறது. இதற்கிடையே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்வதாக ஏராளமானோர் புகார்கள் கூறினர்.
இந்நிலையில் நேற்று சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஸ்ஐ உள்ளிட்ட 3 போலீசார் மது அருந்தி விட்டு வந்திருப்பதாக பக்தர்கள் புகார் கூறினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் திருவனந்தபுரம் நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சசி, தும்பா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஜோஸ்மோன், பூந்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஆகிய 3 பேரும் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் சன்னிதானம் எஸ்பி விஜயன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 3 பேருக்கும் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்கள் மது அருந்தியிருந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்ய தென்மண்டல ஐஜி ஹேமசந்திரன் உத்தரவிட்டார்.