தஞ்சாவூரில் கோலகலமாக தொடங்கியது சதயவிழா-ராஜராஜன் சிலை நிறுவ கோரிக்கை
தஞ்சாவூரை தலைமையிடமாக ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் சதயநட்சத்திர தினத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தஞ்சாவூரில் இரண்டுநாள் சதயவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 1026 வது சதயவிழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
மா மன்னரின் மாட்சிகள்
முதல் நிகழ்ச்சியாக ராஜராஜனின் புகழை உணர்த்தும் மாமன்னரின் மாட்சிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனையடுத்து மங்கள இசை, இசைச்சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இரண்டு நாட்களும் கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஒட்டி ஏராளமானோர் தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெறும் சதயவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
சதயவிழாவின் முக்கிய அம்சமாக பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூன்றுமணிநேரம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது பேசிய பக்தர்கள், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜனின் சிலையை பெரிய கோவிலில் நிறுவவேண்டும் என்றும் தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.