சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு-இன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14-ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 14-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் மகர சங்கிரம பூஜை நடக்கிறது. தொடர்ந்து ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சி தருவார்.
மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிப்பது வழக்கம். இதற்காக பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரணம் நாளை பிற்பகல் 1 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
3 பெட்டிகள் அடங்கிய இந்த திருவாபரண ஊர்வலத்தில் முதல் பெட்டியில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களும், இரண்டாவது பெட்டியில் தங்கக் கலசமும், 3வது பெட்டியில் மாளிகைபுரத்தம்மனுக்கு பயன்படுத்தப்படும் யானையின் நெற்றி பட்டம், கொடிகள் இருக்கும்.
பந்தள மன்னர் சித்திரை திருநாள் ராகவர்மா ராஜா ஊர்வலத்தில் பங்கேற்கிறார். ஊர்வலம் ஆரன்முலா, வடசேரிகரை உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக 14-ம் தேதி சபரிமலையை அடைகிறது. தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடக்கிறது.