கன்னியாகுமரியில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் குவிந்தனர்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கியது முதலே கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் நிரம்பி வழிந்து வருகிறது. இது கன்னியாகுமரிக்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
சபரிமலை தரிசனத்தை முடித்துவிட்டு திரும்புகின்ற வெளிமாநில பக்தர்கள் கன்னியாகுமரிக்கும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சபரிமலையில் மகரவிளக்கை தரிசித்த பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தான் கண்ணில் படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பகுதியில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். படகுத்துறை, சன்செட் பாயின்ட், கடற்கரை பகுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரியின் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காணவும் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கன்னியாகுமரியில் திரண்டிருந்தனர்.
மேலும் காணும் பொங்கலையொட்டியும் கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருந்தது.