சபரிமலை-மகர விளக்கு காலம் இன்று நிறைவு: வசூல் ரூ. 140 கோடி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நடந்தது. இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேவசம்போர்டுக்கு வருவாய் ரூ.140 கோடி கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவ்வருட மகர விளக்கு காலம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று பகல் 11.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைந்தது. பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு காலபிஷேகம் நடந்தது. இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.
பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவர்ம ராஜா மட்டும் தரிசனம் செய்வார். காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படும். வழக்கமாக மகர விளக்கு பூஜை முடிந்தவுடன் சபரி்மலைக்கு பக்தர்கள் வருகை குறைந்துவிடும். ஆனால் இந்தாண்டு மகர விளக்கு பூஜை முடிந்த பிறகும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.