ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!
வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு இணையாக தமிழில் எழுத, படிக்க சொல்லி தருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டியும் நடத்தி குழந்தைகளுக்கு திருக்குறளின் வாழ்க்கை நெறிகளை புரிய வைக்கிறார்கள். நூறு குறள்கள் வரை விளக்கத்துடன், ஒப்பித்து சிறப்புப் பரிசு பெற்ற குழந்தைகளும் உண்டு.
இதுவரை ப்ளேனோ வட்டார அளவில் நடைபெற்று வந்த இந்த திருக்குறள் போட்டியை, 2012-ம் ஆண்டு முதல் முதன் முறையாக டல்லாஸ் மாநகர அளவில் விரிவுபடுத்தி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் ஐந்து முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்தது மூன்று குறள்கள் ஒப்புவித்து விளக்கமும் சொல்ல வேண்டும். எட்டு முதல் பதினோரு வயதுகுட்பட்டவர்களுக்கு ஆறு குறள்கள், பன்னிரண்டு முதல் பதினைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்பது குறள்கள் என மூன்று பிரிவாக போட்டி நடக்கவிருக்கிறது.
டல்லாஸ் மாநகர பகுதிகளில் வசிக்கும் அனைத்து குழந்தைகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் அதிக குறள்களை, விளக்கவுரையுடன் கூறி வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
நூறு, ஐமபது, இருபத்தைந்து டாலர் வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்பரிசு இருக்கிறது. தவிர, பங்கு கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர் வீதம் கொடுத்து எல்லோரையும் உற்சாகப் படுத்துகிறார்கள்.
குறைந்த பட்சம் நூறு திருக்குறள்களுக்கு அதிகமாக சொல்லும் குழந்தைகளில் முதலிடம் பெறுபவருக்கு இருநூறு டாலர் சிறப்புப்பரிசும் உண்டு.
போட்டிக்கான விண்ணப்பங்களை www.pltamil.com என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகள் எந்தெந்த குறள்களை தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கு பெறுகிறார்கள் என்ற விவரத்தோடு, விண்ணப்பங்களை பதிவு செய்து நவம்பர் 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.
அடுத்த ஆண்டு (2012) பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமை இந்தப் போட்டி நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷனை சார்ந்த வேலு மற்றும் தமிழ்மணி தலைமையில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செய்கிறார்கள்.
-டல்லாஸிலிருந்து தட்ஸ்தமிழுக்காக