கார்த்திகை பூஜைக்காக குற்றாலத்தில் குவிந்த பெண்கள்- ஆண்களுக்கு தடை
நெல்லை: கார்த்திகை மாத பூஜைக்காக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்ததால் ஆண்களுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் குவிவது வழக்கம். இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் திருமணமான பெண்கள் அருவியில் குளித்துவிட்டு சிவனை நினைத்து வழிபட்டு, அருவிக் கரையில் பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜையின் மூலம் கணவனின் ஆயுட்காலம் அதிகரித்து, மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இதனையடுத்து குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே பூஜை செய்வதற்காக பெண்கள் குவியத் துவங்கினர். பூஜைக்கு முன்பாக பெண்கள் அருவியில் குளித்துவிட்டு, அருவியின் அருகே உள்ள விநாயகரை வழிபடுவது வழக்கம்.
ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றாலத்தில் குளிக்க குவிந்ததால் மெயின் அருவியில் ஆண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குளிக்க சென்ற பெண்களுக்கு பெண் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
குற்றால அருவியை சுற்றியுள்ள தென்காசி, கடையம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அருவிகளில் குளித்து விட்டு, விநாயகருக்கு பூஜை நடத்தினர்.
இதற்காக நேற்று இரவு 12 மணியில் இருந்து அருவியில் குளிக்க வந்த ஆண்களை போலீசார் திரும்ப அனுப்பினர். காலை 8 மணிக்கு பிறகு ஆண்களுக்கு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதிகாலையிலேயே குற்றாலத்தில் குளிப்பதற்காக வந்த ஐயப்ப பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து, குளித்துவி்ட்டு சென்றனர்.